சர்வதேச பெண்கள் தினம் - வரலாறு, நோக்கம் மற்றும் நடைமுறை
1908 ஆம் ஆண்டு, நியூயார்க் நகரில் , சுமார் 15,000 பெண்கள் ஒன்று திரண்டு
பேரணி ஒன்றை நடத்தினார்கள். வேலை நேரத்தை குறைத்தல், வேலைக்கேற்ற சம்பளம் வழங்குவது, வாக்களிக்கும் உரிமை ஆகிய முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த பேரணி நடைபெற்றது. இந்த பேரணி தான், பெண்கள் தினம் என்று ஒன்று கொண்டாடப்பட வேண்டும்
என்கிற எண்ணத்தை விதைத்தது. இந்த பேரணி நடைபெற்ற அடுத்த ஆண்டு, அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி, முதல் மகளிர் தேசிய தினத்தை அறிவித்தது.
இந்த நடைமுறையை , சர்வதேச மகளிர் தினமாக மாற்றுவதற்கு,
கிளாரா ஜெட்கின் என்கிற கம்யூனிச பெண்மணிதான் முதல் கட்ட வேலைகளை செய்தார்.
1917 ஆம் ஆண்டு , உணவும் அமைதியும் என்கிற பெயரில் ,
ரஷ்யப்பெண்கள் நடத்திய புரட்சிப்போராட்டம் தான் அன்று ரஸ்யாவில் நிலவிய
கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்துவதற்கு பெரிதும் உதவியது.
இந்த போராட்டம் தொடங்கப்பட்ட நாள் தான் மார்ச் 8.
1975 ஆம் ஆண்டு முதல், ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச பெண்கள் தினத்தை அங்கீகரித்து கொண்டாடி வருகிறது. அவ்வாறு கொண்டாடும்போது , ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கான ஒரு கருப்பொருளை வழங்குகிறது. "பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில் நுட்பம்" என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள். டிஜிட்டல் பாலின இடைவெளியின் தாக்கத்தை ஆராய்வதையும் இந்த கருப்பொருள் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. டிஜிட்டல் உலகத்துக்கான பங்களிப்பில் பெண்களின் பங்கேற்பு சீர் செய்யப்படவில்லையென்றால், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சுமார் ஒரு லட்சம் கோடிகள் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்பு, முதலாளித்துவ உலகம், இதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கும் என்ற உறுதியை அளிக்கிறது.
அது சரி!, சர்வதேச ஆண்கள் தினம் என்று ஏதாவது ஒன்று உண்டா என்று கேட்கிறீர்கள்தானே! ஆம் . உண்டு . அந்த நாள் நவம்பர் 19. ஐக்கிய நாடுகள் சபை, இந்த தினத்தை அங்கீகரிக்கவில்லை என்றாலும் , சுமார் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
www.registermarriages.in
Comments
Post a Comment