திருமணத்திற்காக மதம் மாறுதல்
இந்தியாவில் ஒரு தனி மனிதன் தான் விரும்பிய மதத்தை பின்பற்றுவதை , தான் விரும்பிய மதத்திற்கு மாறுவதை அல்லது எந்த மதத்தையும் சாராமல் இருப்பதை, அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இந்திய அரசியல் சட்டம் பட்டியலிடுகிறது . ஒரு தலித் அல்லது பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் தமக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு சலுகை மூலம் அரசு வேலை ஏதாவது பெற்றுக்கொண்ட பிறகும் , தான் விரும்பிய வேறு ஒரு மதத்திற்கு மாறினால் கூட, முந்தைய மதத்தில் இருந்த போது கிடைக்கப்பெற்ற சலுகை மூலம் அடைந்த அரசு வேலை பறி போகாது. இது போன்ற விஷயங்கள் , நமது அரசியல் அமைப்புச் சட்டம் , விரும்பிய மதத்தைத் தேர்வு செய்யும் மதத் தேர்வுரிமையை எந்த அளவுக்கு மதிப்பு மிக்கதாக்கியிருக்கிறது என்பதை நமக்கு உணர்த்தும். அதே போன்று உரிய வயதை அடைந்த ஒரு ஆணும் பெண்ணும் விரும்பி திருமணம் செய்து கொண்டால், அத்திருமணத்தை அவர்களது பெற்றோர்கள் கூட தடுத்து விட முடியாது. அவர்கள் ஒரே ஜாதியை , மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெவ்வேறு ஜாதிகளை, மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டத்தின் பார்வை சமமானது. இதுவும் இந்திய அரசியல் சட்டம் வகுத்தளித்துள்ள மாண்பு மிக்க உரிமைகளில் ஒன்றுதான். ஆனால் சமீப காலங்களில், பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் சில மாநில அரசுகள், மதம் மாறி திருமணம் செய்து கொள்ள தடை விதித்து சட்டம் இயற்றி உள்ளன. மதம் மாறும் உரிமை , விரும்பியவரை திருமணம் செய்து கொள்ளும் உரிமை ஆகிய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள முக்கியமான இரண்டு அடிப்படை உரிமைமகளை, இது மறுதலிக்கிறது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது ஒரு புறம் இருக்கட்டும். மதம் மாறி திருமணம் செய்து கொள்ள தடை விதிப்பதற்கு அவர்கள் பல்வேறு காரணங்கள் சொன்னாலும், இவ்வாறு செய்யப்படும் திருமணங்கள் லவ் ஜிகாத் திருமணங்கள் என்று குறிப்பிடுவதுதான் காலக்கொடுமை. உலகம் முன்னேற்றத்தின் பாதையில் நடை போடும் தருணத்தில், இந்தியாவை பின்னோக்கி இழுக்கும் முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது என்பதே யதார்த்தம். நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை போற்றுவோம். இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டங்களை பாதுகாப்போம்.
www.registermarriages.in
Comments
Post a Comment