சுய மரியாதைத் திருமணம் மற்றும் பதிவு விவரங்கள்
மதங்களின் திருமணச் சடங்குகளை தவிர்த்து விட்டு நடைபெறும் திருமணங்கள் சுய மரியாதைத் திருமணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்து மதத்தைச்சேர்ந்த தம்பதியர்கள் மேற்கொள்ளும் சுயமரியாதைத் திருமணங்கள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி, சுயமரியாதைத் திருமணத்திற்கான சட்டத் திருத்தம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, 1968 ஜனவரி 28 அன்று , குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப்பெற்றது. இந்து திருமணச் சட்டம் - 1955 சட்டத்தின் 7(A) பிரிவில் திருத்தமாக இது சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியார் என்ற ஈ.வே. ராமசாமி அவர்கள் சுய மரியாதைத் திருமணச் சட்டத்தின் முன்னோடி என அழைக்கப்படுகிறார்.இதன்படி , ஒரே ஜாதியைச் சேர்ந்த அல்லது வெவ்வேறு ஜாதிகளைச்சேர்ந்த இரண்டு இந்துக்கள் எவ்வித மதச் சடங்குகளும் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாம். இத்திருமணங்களை நடத்தி வைப்பதற்கு மத குருமார்கள் எவரும் தேவைப்படாது. தாலி கட்ட வேண்டிய அவசியமும் இல்லை. இத்தகைய திருமணங்களை இந்து திருமணச் சட்டம் - 1955 பிரிவு 7 (A) அடிப்படையில், அரசு சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்து அரசு திருமணச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். சுய மரியாதைத் திருமணங்களை தமிழ்நாட்டில் நடத்தினால் மட்டுமே சட்ட அங்கீகாரத்தை பெற முடியும். தமிழ்நாட்டில் இத்திருமணங்களை நடத்துவதன் வழியாக பெறப்படும் அரசு திருமணச் சான்றிதழ்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் உலகின் அனைத்து நாடுகளிலும் சட்ட ரீதியாக செல்லுபடியாகும். இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், வெளி நாட்டினரும் தமிழ்நாட்டில் சுய மரியாதைத் திருமணத்தை செய்து கொள்ளலாம். பதிவு செய்து அரசு திருமணச் சான்றிதழும் பெற்றுக்கொள்ளலாம். ஜைனர்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் பார்சிகள் இச்சட்டத்தின் அடிப்படையில் திருமணம் செய்து சான்றிதழ் பெறலாம். முஸ்லீம்களும், கிறித்தவர்களும் இச்சட்டத்தின் பயனாளர்கள் அல்ல. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் செய்து கொள்ளும் மதக் கலப்புத் திருமணங்களையும் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்து சான்றிதழ் பெற முடியாது.
www.registermarriages.in

Comments
Post a Comment